நம்மவர்களுக்கே உரிய சிறப்பு சமையல்கள் இனி இப்பகுதியில் தொடர்ந்து வெளிவரும் எண்ணைக் கத்திரிக்காய் குழம்பு தேவையானப் பொருட்கள்:கத்திரிக்காய் (சிறிய அளவு) - 5 அல்லது 6 புளி - எலுமிச்சம் பழ அளவு மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன் பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை துவரம் பருப்பு - 3 டீஸ்பூன் கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் வெந்தயம் - 1/2 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 4 கடுகு - 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது நல்லெண்ணை - 4 அல்லது 5 டேபிள்ஸ்பூன் உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு செய்முறை:உப்பு, புளி இரண்டையும் தண்ணீரில் ஊற வைத்து, கரைத்து, புளித்தண்ணீரை தனியாக எடுத்து வைக்கவும். புளிக்கரைசல் ஒன்றரைக் கப் இருக்க வேண்டும்.ஒரு வாணலியில் 1 அல்லது 2டீஸ்பூன் எண்ணை விட்டு, அதில் துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், பெருங்காயம், மிளகாய் ஆகியவற்றைப் போட்டு சிவக்க வறுத்து எடுத்து, ஆறியவுடன், சிறிது உப்புச் சேர்த்து மிக்ஸியில் போட்டு, பொடியாக செய்து எடுக்கவும்.கத்திரிக்காயின் காம்பை இலேசாக நறுக்கி விட்டு (காம்பை முழுதாக நீக்க வேண்டாம்), அதன் அடி பாகத்தை நான்காகக் கீறிக் கொள்ளவும். அதில் அரைத்து வைத்துள்ளப் பொடியை நன்றாகத் திணித்துக் கொள்ளவும். மீதி பொடி இருந்தால், அதைத் தனியாக வைத்துக் கொள்ளவும்.அடி கனமான ஒரு பாத்திரத்தில், எண்ணையை விட்டு, எண்ணை சூடானதும், அதில் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன், கறிவேப்பிலையும், கத்திரிக்காயையும் சேர்க்கவும். (கத்திரிக்காயை ஒன்று ஒன்றாக எடுத்து, தனித்தனியாக இருக்கும்படி போடவும்). ஒரு மூடியால் மூடி, அடுப்பை சிறு தீயில் வைத்து வேக விடவும். ஒரிரண்டு நிமிடங்களுக்குப் பிறகு, மூடியைத் திறந்து காயைத் திருப்பி விடவும். காயின் தோல் நிறம் மாறியதும், அதில் புளிக்கரைசல், சாம்பார் பொடி, மஞ்சள் தூள் சேர்த்து, இலேசாகக் கிளறி விட்டு, அத்துடன், காயில் திணித்தது போக மீதமுள்ள பொடியையும் சேர்த்து, மீண்டும் மூடி வைத்து கொதிக்க விடவும். ஒரு கொதி வந்ததும், அடுப்பை சிறு தீயில் வைத்து, குழம்பு சற்று கெட்டியாகும் வரை வைத்திருந்து, இறக்கி வைக்கவும்.
No comments:
Post a Comment